Wednesday, October 22, 2008

ஈழத்தமிழன் - எம்மினத்தவனே! (1)

வீழ்பவன் அங்கே!
எம்மினத்தவனே!
மாள்பவன் அங்கே!
எம்மினத்தவனே!

ஆயுதம் கொடுத்தவன்
எவனெனக் கண்டால்
ஐயஹோ கொடுமை!
அவனோ எம்மிடத்தவனே!

ஐய்யோ! ஐய்யோ!
பாதகம் புரிந்தோம்!
இனியும் வேண்டாம்!
நிறுத்துக உதவியை!

அகதியாய் வந்தால்
அவலமாய் வாழ்வு!
சிங்கள வீரர்க்கு
சிறப்புப் பயிற்சிகள்!

என்னே கொடுமை!
என்னே விந்தை!
நம்மினத்தவர்க்கே
நாமிழைத்த கொடுமை!

ஐய்யோ! ஐய்யோ!
பாதகம் புரிந்தோம்!
இனியும் வேண்டாம்!
நிறுத்துக உதவியை!

எங்கள் உறவுகள்
உதிர்க்கும் உதிரம்!
இனியும் பொறுத்திட - எம்
இதயமும் வெடித்திடும்!

அரசுகள் முயன்றே
அமைதியைக் காப்பீர்!
எம் உறவுகள்
பிழைக்க
அவர்தம்
உரிமைகள் உடைமைகள்
அனைத்தையும் காக்க
எம் குரல் ஒலிக்கும்!
நித்தமும் இங்கே!

இவ்வொரு குரலோசை
ஓய்ந்து போகலாம்!
எம் உயிர்களின்
ஓசை
தேய்ந்திடலாமோ!
தமிழரின் ஓசை
தாழ்ந்திடலாமோ!

விரைவில் ஒலிக்கும்!
வெற்றியின் முரசு!
எம் தமிழினம்
ஜெயிக்கும்!
படைத்திடும் அரசு!